சென்னை: சமீப நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளால், அணையின் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. இதனால், அணை மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே நடப்பாண்டில், 6 முறை மேட்டூர் அணை நிரம்பி உள்ள நிலையில், மீண்டும் நிரம்பும் வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பியது. இதனால் உபரி நீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

நேற்று  (அக் 13ந்தேதி) காலை வினாடிக்கு 42,167 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து இன்று (அக் 14)  காலை வினாடிக்கு 23,648 கன அடியாக சரிந்தது. நீர் வரத்து சரிந்தாலும் பாசனத்திற்குதிறக்கப்படும் நீரின் அளவு மழையின் காரணமாக குறைக்கப்பட்டு உள்ளதால், அணையிள்  நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதன் காரணமாக அக்டோபர் 13ந்தேதி  காலை 116.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று (அக். 14)  காலை 117.46 அடியாக உயர்ந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 12,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 89.47 டி.எம்.சி. ஆக உள்ளது.

தொடர்ந்து நீரவரத்து இருப்பதாலும், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், அணை விரைவில் தனது முழு கொள்ளவான 120 அடியை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.