சென்னை: நடப்பாண்டில் 7வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. அதுபோல மதுரை அருகே உள்ள வைகை அணையும் முழு கொள்ளவை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நடப்பாண்டு தமிழ்நாட்டில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலத்திலும் நல்ல மழை பெய்த நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியது முதல் சென்னை முதல் குமரி வரை பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
தமிழகத்தின் பல மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், காவிரியில் நீர் வரத்து அதிகமாக வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான தமிழக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக நேற்று மாலை (அக்.20) சேலம் மாவட்டம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. நடப்பாண்டில் மட்டும் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி 7வது முறையாக எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல, 71 அடி கொள்ளளவு உள்ள வைகை அணை தற்பொழுது முழுவதுமாக நிறைந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து வினாடிக்கு 5491 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து தண்ணீர் 1094 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு 1,000 கன அடி வீதம் அணையின் 7 பெரிய மதகுகள் வழியாக வைகை ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீர்வரத்திற்கேற்ப உபரி நீர் வெளியேற்றத்தின் அளவும் அதிகரிக்கக்கூடும் என்பதால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கக்கூடிய பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நீர்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி அணையின் நீரிருப்பு 5,572 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 6,071 கன அடியாக இருக்கிறது. அதே போல வழக்கம்போல குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1,349 கன அடி நீர் கால்வாய் வழியாக சென்று கொண்டிருக்கிறது.