சென்னை: மே 5ந்தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு,  தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை என வணிகர் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5ந்தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் வணிகர்கள் தங்களது கடைகளையும், நிறுவனங்களையும் மூடி, கொண்டாடி வருகின்றனர். மேலும் அன்றைய தினம் வணிகர்கள் தின மாநாடும் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள  வணிகர்கள், வணிக  நிறுவனங்கள், வெள்ளையன் தலைமையிலான வணிகர் சங்கத்திலும், விக்கிரமராஜா தலைமையிலான வணிகர்கள் சங்க பேரமைப்பிலும் உறுப்பினர்களாக  செயல்பட்டு வருகின்றனர். இந்த சங்கத்தினர் தனித்தனியாக வணிகர் தின மாநாட்டை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு வயது முதிர்வு காரணமாக ஏற்பட்டுள்ள உடல்நலப் பாதிப்பால், வெள்ளையன் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடாத நிலையில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வணிகர்கள் மாநாடு குறித்து அறிவித்துள்ளார்.

அதன்படி, திருச்சி சமயபுரத்தில் வருகிற மே 5 ஆம் தேதி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநாடு நடைபெற உள்ளது.  இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு,  அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த மாநாடு குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  தமிழக வணிகர்களின் துயரை துடைத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றிடும் வகையில் மாபெரும் மாநாட்டினை வணிகர் தினமான மே 5 ஆம் தேதி நடத்திட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கின்றன. வருகின்ற மே 5 ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் கடைகளுக்கு விடுமுறை அளித்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வணிகர்கள் திருச்சி தரணியில் திரள இருக்கிறார்கள்.

மாநாட்டில் பங்கேற்கும் தமிழக முதல்வரை வணிகர்கள் அனைவரும் வரவேற்று, வணிகர் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தையும், வணிகர்களின் வரலாற்றில் புதியதோர் மைல் கல்லையும் படைத்திட இருக்கிறார்கள். நடைபெற இருக்கும் 39 ஆவது மாநில மாநாடு வணிகர்களின் வரலாற்று அத்தியாயத்தில் முத்திரைப் பதித்து, ஒரு அடையாள மாநாடாக, வணிக வரலாற்றின் ஒரு திருப்பு முனையாக நிச்சயம் அமையும் என்கிற உறுதியோடு, குடும்ப விழாவாக கருதி, வணிகர்கள் குடும்பத்துடன் பங்கேற்க இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.