டெல்லி

டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் மனீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவலை 30 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

கடந்த அண்டு பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்-மந்திரியான மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. கைது செய்தது.  பிறகு  டெல்லி மதுபான கொள்கையில் 2021-22-ம் ஆண்டில் நடந்த பணமோசடி தொடர்பாக மணீஷ் சிசோடியா மீது அமலாக்கத்துறை மார்ச் 9ம் தேதி வழக்குப்பதிவு செய்தது.

இதையொட்டி மணீஷ் சிசோடியா டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சி.பி.ஐ., அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை தனித்தனியே நீதிமன்ற காவலில் எடுத்து மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக மனீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று ரோஸ் அவன்யூ கோர்ட்டில் காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அமலாக்கத்துறை தரப்பில் வழக்கு விசாரணைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மணீஷ் சிசோடியாவின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதாவது இந்த வழக்கில் சிசோடியாவுக்கு மே 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.