டெல்லி: இந்தியாவின் அண்டை மாநிலமான வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் வன்முறை குறித்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இன்று டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தியும் பங்கேற்றார்.

வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து  தனது பதவியை ராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறினார். அந்நாட்டு ராணுவ விமானத்தில் தனது சகோதரி ஹேக் ரேஹானாவுடன் பிரதமர் மாளிகையான கனபாபனில் இருந்து புறப்பட்டு, டெல்லி அருகே ஹிண்டன் விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. தற்போது இந்தியாவில் தஞ்சம் புகுந்திருக்கும் அவர்கள் இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும், இங்கிலாந்து அரசிடம் ஷேக் ஹசீனா தஞ்சம் கோரியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஷேக் ரேஹானா இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர் என்றும் எனவே, அவரோடு ஷேக் ஹசீனா லண்டலின் தங்க முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.  இதற்கிடையில் அவர் பெலாரஸ் நாட்டிற்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் தற்காலிகமாகவே இந்தியாவில் அவர் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வங்கதேச கலவரத்துக்கு பின்னணியில் பாகிஸ்தான், சீனாபோன்ற நாடுகளும் பயங்கரவாத அமைப்புகளும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து எல்லையோரங்களில் பாதுகாப்பை இந்திய ராணுவம் பலப்படுத்தி ள்ளது

இந்த  நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை இந்திய பாதுகாப்புத்துறையின் தேசிய ஆலோசகர் அஜித் தோவல், உத்தரபிரதேசம் காசியாபாத்தில் உள்ள ஹின்டன் விமானப்படைத் தளத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். வங்கதேசத்தின் சூழல் குறித்து கேட்டு அறிந்ததோடு, எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஷேக் ஹசீனாவிடம் அஜித் தோவல் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து,  வங்கதேச சூழல் குறித்து  மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று காலை  அவசர ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில்,.  பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளது குறித்தும், வங்கதேசத்தில் நடந்து வரும் அரசியல் மாற்றம், கலவரம் குறித்தும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டத்தில் விளக்கமளித்து வருகிறார் . மேலும், இந்திய – வங்கதேச எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள், வங்கதேச அரசியல் சூழல், ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு வந்தது உள்ளிட்டவை குறித்து விரிவான விளக்கத்தை ஜெய்சங்கர் அளித்தார்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி, டிஆர் பாலு  காங்கிரஸின் கே.சி.வேணுகோபால், தேசியவாத காங்கிரஸ்(சரத் பவார் அணி) சுப்ரியா சுலே உள்ளிட்ட பிற கட்சிகளின் எம்பிக்களும் பங்கேற்றனர்.