லண்டனில் உள்ள சர்வதேச விமான நிலையமான ஹீத்ரோ விமான நிலையம் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்துக்கு மின்சாரம் விநியோகிக்கும் மின் நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து காரணமாக விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாகவும் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து காரணமாக அந்தப் பகுதியில் கடும் புகைமூட்டம் காணப்படும் நிலையில் அப்பகுதியில் இருந்த 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், 200 மீட்டர் சுற்றளவுக்கு தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து லண்டன் விமான நிலையத்துக்கு வருகை தரவிருக்கும் அனைத்து விமானங்களும் வேறு விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
இந்த மின் விபத்து காரணமாக உலகின் பல்வேறு விமான நிலையங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் வந்து செல்லும் ஹீத்ரோ விமான நிலையம் இன்று நாள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.
பயணிகள் யாரும் விமான நிலையப் பகுதிக்கு வரவேண்டாம் எனவும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமானத்தின் நேரத்தை உறுதி செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.