சென்னை: ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும்  23ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பயணத்தை மேற்கொள்ள இஸ்லாமியர்களுக்கு மத்திய மாநில அரசுகள் மானியத்துடன் பயண ஏற்பாடுகளை செய்து வருகிறது.

அதன்படி 2025ம் ஆண்டு  ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்து. அதற்கான காலம் முடிவடையும் நிலையில், மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர்  வெளியிட்டுள்ள அறிக்கையில்,   இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியை வரும் 23ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக அல்லது ஐபோன், ஆண்ட்ராய்டு கைபேசியில் ‘HAJ SUVIDHA’ செயலியினை பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 23.9.2024 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 15.1.2026 வரையில் செல்லத்தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழு தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரி சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.