சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்றைய கேள்வி நேரத்தின்போது, மடிக்கணினி, கால்நடை மருத்துவமனை, ரேசன் கடைகளுக்கு புதிய கட்டிடங்கள், புதிய பேருந்து நிலையம் என பல்வேறு கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் மார்ச் 14ந்தேதி தொடங்கிய நிலையில், 30ந்தேதிவரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில், 2025-26ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன்மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

இன்று காலை அவை கூடியதும், கேள்விகளும், அதற்கான பதில்களும் சுருக்கமாக இருக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு சபாநாயகர் அப்பாவு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதற்கிடையில்,  நேற்று சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, ரூ.10,000-ல் தரமான லேப்டாப் எப்படி வாங்க முடியும் என எம்.எல்.ஏ. தங்கமணி நேற்று கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு நாளை (இன்று) பதில் அளிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று பட்ஜெட் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் உரையாற்றிய அமைச்சர் தங்கம் தென்னரசு, 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கான மடிக்கணினி ரூ.20,000 என்ற மதிப்பில் வழங்கப்படும். மாணவர்களுக்கு ரூ.20,000 மதிப்புள்ள தரமான மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ரேசன் கடை புகார் பெட்டி மூலம் எத்தனை புகார்கள் வந்துள்ளன, மக்களுக்கு தெரியுமாறு புகார் பெட்டி வைக்க வேண்டும் என உறுப்பினர் ராஜேஷ்குமார் கூறினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பெரிய கருப்பன், தி.மு.க. ஆட்சியில் ரேசன் கடைகளில் புகார் பதிவேடுகள் மூலம் 97,535, புகார் பெட்டி மூலம் 875 புகார்கள் வந்துள்ளன. புகார் பதிவேடு பெட்டிகளை மக்களுக்கு தெரியும் வகையில் வைக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளோம் என்றார்.

மேலும், ரேசன் கடைகளில் கைரேகை வைப்பத்தில் சிக்கல் இருந்தால், புகாரை உடனுக்குடன் சரிசெய்கிறோம். மேலும் ரேசன் கடைகளில் Brod Band சேவைகளை தடையின்றி விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவு கூறினார்.

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டப்படுமா என அசோக்குமார் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு அசோக்குமார் எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர்,  தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 34,902 ரேசன் கடைகளில் 6,218 கடைகள் வாடகை கட்டிடங்களில் செயல்படுகின்றன. நடப்பாண்டில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன  என தெரிவித்தார்.

திருப்பூர் காளிபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்படுமா என எம்.எல்.ஏ. விஜயகுமார் கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் கூறிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  திருப்பூர் காளிபாளையத்தில் முதற்கட்டமாக கால்நடை கிளை நிலையம் அமைக்க பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மதுரை திருமங்கலத்தில் தற்போதுள்ள பேருந்து நிலையம் போதுமானதாக இல்லை, அங்கு ஏராளமான பேருந்துகள் வந்து செல்வதால், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை  ஏற்ற அமைச்சர் கே.என்.நேரு  மதுரை திருமங்கலத்தில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டித் தரப்படும் என  உறுதி அளித்தார்,

அரூர் பகுதியில் துணைமின்நிலையம் தேவை என கூறிய உறுப்பினரின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர் செந்தில் பாலாஜி,  அரூர் செட்டிப்பட்டி ஊராட்சி யில் மின்தேவை பூர்த்தி செய்ய தற்போது உள்ள துணைமின் நிலையமே போதுமானது என்று  கூறினார்.