இம்பால்: மணிப்பூர் முன்னாள் முதல்வர் வீட்டில் குக்கி ஆயுதக் குழுக்கள் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல்  நடத்தினர். இதில் ஒருவர் பலியான நிலையில் மேலும் 5 பேர் காயமடைநத்னர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் குகி-மெய்தி இன குழுக்களுக்கு இடையே மோதல் கலவரமாக தொடர்கிறது. தொடர்ந்து துப்பாக்கி சூடு, தீவைப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த பரபரப்பான சூழலுக்கு இடையே சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் நடத்தி முடிக்கப்பட்டது. இருந்தபோதிலும் வன்முறை சம்பவங்கள் முடிவுக்கு வராமல் அவ்வப்போது தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதை வைத்து அங்கு அரசியல் செய்யப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் அங்குள்ள மக்களிடையே  அமைதியை ஏற்படுத்துவதற்கு பதிலாக ஒருசார்பாக பேசி வருவதால், மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  மணிப்பூர் முன்னாள் முதலமைச்சர் வீட்டில் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  பிஷ்ணுபூர் மாவட்டத்தின் மொய்ரெங் பகுதியில் உள்ள முன்னாள் முதலமைச்சர் மைரெம்பாம் கொய்ரெங் வீட்டு வளாகத்தில் நேற்று மதியம் ராக்கெட் லாஞ்சர் மூலம் தக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு பூஜை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த தாக்குதலில் அவரது வீட்டின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதாகவும், இந்த தாக்குல் நடைபெற்ற நேரத்தில் அவரது விட்டில் பூஜைகள் நடைபெற்று வந்ததாகவும்,  தாக்கலால் பூஜை செய்து வந்த பூசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மேலும், அங்குள்ள சுராசந்த்பூர் மலைப்பகுதியில் ராக்கெட் லாஞ்சர் மூலம் நடந்த தாக்குதில் 2 கட்டடங்கள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்,   மெய்தி இனமக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியான பிஷ்ணுபூர் மாவட்டத்தில் குகி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.  ராக்கெட் குண்டு விழுந்த இடத்திற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.