சென்னை: சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா அணியை எதிர்கொண்ட சென்னை அணி பெரும் தோல்வியை அடைந்தது.
காயம் காரணமாக கேப்டன் ருதுராஜ் விலகியிருக்கும் நிலையில், அனைவரது கவனமும் புதிய கேப்டன் தோனி மீது இருக்கும். 4 தொடர் தோல்விகளைச் சந்தித்து துவண்டுள்ள சென்னை அணிக்கு அவர் திருப்பு முனையை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எகிறிய நிலையில், போட்டி விறுவிறுப்பாக இரக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையேயான ஐபிஎல் 2025-ன் 25-வது லீக் போட்டி சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று ( ஏப்ரல் 11) இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியிலாவது சிஎஸ்கே வெற்றிபெறும் என சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், சிஎஸ்கே அணியினர் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பி பெரும் தோல்வியை சந்தித்தது.
கொல்கத்தாவின் அசத்தல் பந்துவீச்சால் 103 ரன்களில் சுருண்ட சென்னை; நரைன் அதிரடியில் 10.1 ஓவர்களில் 107 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.
சிஎஸ்கே அணியின் தொடர் தோல்வி கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளதுடன், கேப்டன் தோனி மீதான மரியாதையும் கேள்விக்குறியாக்கி உள்ளது. சமீப காலமாக ஆட்டும் போட்டியில், தோனியின் அணுகுமுறையும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் இன்று வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும் 25-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சிஎஸ்கே முதலில் விளையாடியது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். டெவான் கான்வே 12 ரன்களிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின், ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ராகுல் திரிபாதி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின், களமிறங்கிய வீரர்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன், ரவீந்திர ஜடேஜா மற்றும் தீபக் ஹூடா இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதுபோல, இந்த போட்டியில் மீண்டும் கேப்டனாக களமிறங்கிய எம்.எஸ்.தோனி 1 ரன்னில் சுனில் நரைன் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
நிதானமாக விளையாடிய ஷிவம் துபே 29 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 3 பவுண்டரிகள் அடங்கும். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய சுனில் நரைன் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா தலா இரண்டு விக்கெட்டுகளையும், மொயின் அலி மற்றும் வைபவ் அரோரா தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்
இதையடத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் எந்தவித தயக்கமுமின்றி ஆட்டத்தை விரைவாக முடிக்க முனைப்பு காட்டினர்.
குயிண்டன் டிகாக் – சுனில் நரைன் இருவரும் இணைந்து சென்னை பந்து வீச்சை சிதறடித்தனர். சுனில் நரைன் 44 ரன்களும்(2பவுண்டரி, 5 சிக்ஸர்), டிகாக் 23 ரன்களும்(3 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தனர். அவரகளுக்குப் பின்னர் வந்த ரஹானே – ரிங்கு சிங் இருவரும் இணைந்து கொல்கத்தா அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
முடிவில், 10.1 ஓவர்களில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது.
இதன் மூலம் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
சென்னை தரப்பில் கம்போஜ், நூர் அகமது தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணி 13 ஆண்டுகளுக்குப் பின்னர் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சென்னை அணி தொடர்ச்சியாக 5 வது தோல்வியும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடர்ச்சியாக 3-வது தோல்வியாக அமைந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 3 வெற்றிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.