டெல்லி

டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.

அமலாக்கத்துறை டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைது செய்தது. தற்போது கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டு அவரின் நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.

டெல்லி மதுபான கொள்கையில் ஊழல் நடைபெற்றதாக கெஜ்ரிவால் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து சிறையில் இருந்த கெஜ்ரிவாலை ஊழல் வழக்கில் ஜூன் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் அதேவேளை, இந்த வழக்குகளில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி கெஜ்ரிவால் மனுதாக்கல் செய்து வருகிறார்.

கடந்த ஜூன் 20 ஆம் தேதி அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு டெல்லி கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.ஆனால் இந்த ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது. கெஜ்ரிவால் இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை ஜூலை 12ம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியும் சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். கடந்த மாதம் 17 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார். இந்த வழக்கு கடந்த 5ம் தேதி விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் சிபிஐ கைது செய்ததாக கூற முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

சிபிஐ கைது நடவடிக்கையை ரத்து செய்ய மறுத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரவிந்த கெஜ்ரிவால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். விரைவில் இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.