ஐதராபாத்: கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக,  தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், சட்ட மேலவை உறுப்பினருமான கவிதா, ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் பிஆர்எஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் சிக்கியவர்களில், பிஆர்ஸ் கட்சியின் மேலவை உறுப்பினரான கவிதாவும் ஒருவர். இவர்  ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர். தற்போது ஜாமினில் உள்ளார். இவர், கட்சி நிர்வாகிகள் மீது  ஊழல் குற்றச்சாட்டுக்களை தெரிவித்திருந்தார்.

அதாவது,  காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருந்தால், பிஆர்எஸ் தலைவர்கள் ஹரிஷ் ராவ் மற்றும் சந்தோஷ் ஆகியோர்தான் பொறுப்பு என்று கவிதா நேரடியாகக் குற்றம் சாட்டினார். கேசிஆரின் கண்களை மறைத்து அவர்கள் பெரும் சொத்துக்களைக் குவித்தனர். அவர்கள் ஊழலின் அனகொண்டாக்கள்” என்று அவர் குற்றம் சாட்டினார். இந்த கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரை கட்சி இடைநீக்கம் செய்துள்ளது.

இதையடுத்து, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்து கட்சி தலைவரும், அவரது தந்தையுமான சந்திரசேகரராவ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கவிதாவை கட்சியிலிருந்து  இடைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக பிஆர்எஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு பொதுச் செயலாளர்கள் சோமா பாரத் குமார் மற்றும் டி.ரவீந்தர் ராவ் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பிஆர்எஸ்  கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய நாட்களில் எம்எல்சி கவிதாவின் செயல்கள், அணுகுமுறை மற்றும் அவரது கட்சி விரோத நடவடிக்கைகளை பிஆர்எஸ் உயர்மட்டக் குழு தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. அவரது செயல்பாடுகள் மற்றும் அறிக்கைகள் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதாக கட்சித் தலைமை உணர்ந்தது. இதனால் அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் கவிதா ரூ.292 கோடி மோசடி! அமலாக்கத்துறை