சென்னை: ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்! “பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.

18வது மக்களவைக்கான தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது.  வரும் 4ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என எதிர்க்கட்சிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளன.

இந்த நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர், ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  பா.ஜ.க.வின் பத்தண்டுகால பாசிச ஆட்சியை வீழ்த்தி, இந்தியாவைக் காக்க உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்து, வெற்றியின் முகட்டில் நிற்கிறது.

தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மமதையில் இருந்த பா.ஜ.க.வுக்கு எதிராக, ஜனநாயகச் சக்திகளின் மாபெரும் அணிதிரளாக அது அமைந்திருக்கிறது. இந்திய மக்கள் அனைவருக்கும் நம்பிக்கை தரும் அணியாக, தேர்தல் களத்தில் தங்களது இடைவிடாத பரப்புரையின் மூலம் இந்தியா கூட்டணியின் முன்னணித் தலைவர்கள், பா.ஜ.க. உருவாக்கிய போலி பிம்பத்தை மக்கள் மன்றத்தில் உடைத்தெறிந்து இருக்கிறோம்.

இந்தியா கூட்டணியின் வெற்றிச் செய்திக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. வாக்கு எண்ணிக்கையின் போது அதிகமான விழிப்புணர்வுடன் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

ஜூன் 4 – இந்தியாவின் புதிய விடியலுக்கான தொடக்கமாக அமையும்.

இது தொடர்பாக இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கழகப் பொருளாளரும் – நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு பங்கேற்கிறார்.

பாசிச பா.ஜ.க. வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.