டெல்லி

டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் அளித்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.

அமலாக்கத்துறை டெல்லி  அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது தற்போது அவர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அமலாக்கத்துறை பதிவு செய்த பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 20ம் தேதி டெல்லி கீழமை நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவுக்கு டெல்லி ஐகோர்ட்டு தடை விதித்தது.  கெஜ்ரிவால் இந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஜூலை 12 ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பணமோசடி வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஆயினும் சிபிஐ பதிவு செய்துள்ள ஊழல் வழக்கில் கெஜ்ரிவால் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிபிஐ பதிவு செய்த ஊழல் வழக்கில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இன்று இந்த மனு நீதிபதி கிருஷ்ணா முன் விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் கெஜ்ரிவால் தரப்பில் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, இடைக்கால ஜாமீன் கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தார். வரும் 29 ஆம் தேதி சிபிஐ வழக்கில் தனக்கு வழக்கமான ஜாமீன் (regular bail) வழங்கக்கோரி கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.