ரித்வார்

ரித்வார் சிறையில் ராமாயண நாடகம் நடந்த போது வானர வேடமிட்ட இரு கைதிகள் தப்பி ஓடியதால் அதிகாரிகள் மீது நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் மாவட்ட சிறையில், தசரா பண்டிகையை முன்னிட்டு ராமாயண நாடகம் அரங்கேற்றம் செய்யப்பட்டது.  நாடகத்தில் சிறைக் கைதிகள் சிலர், வானரங்கள்(ராமரின் படையைச் சேர்ந்த குரங்குகள்) போல் வேடமிட்டிருந்தனர்.

வானர வேடமிட்டிருந்த பிரமோத் மற்றும் ராம்குமார் ஆகிய 2 கைதிகள், நாடக மேடையில் இருந்து யாருக்கும் தெரியாமல் இறங்கி, சிறை வளாகத்தின் பின்புற பகுதிக்கு சென்று அங்கு கட்டிட வேலைகளுக்காக் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏணியை எடுத்து, 2 கைதிகளும் சிறைச் சுவரில் ஏறி, தாண்டி குதித்து தப்பி ஓடியுள்ளனர்.

பிரமோத், கொலை குற்றத்திற்காக ஆயுள் தண்டனை பெற்ற கைதி ஆவார். ராம்குமார், கடத்தல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக வைக்கப்பட்டிருந்தார். இரு கைதிகள் தப்பியோடிய விவகாரத்தில், 6 சிறைத்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் இருவரும் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட நீதிபதி கர்மேந்திர சிங் இது குறித்து,

“சிறை நிர்வாகத்தினர் மிகவும் அஜாக்கிரதையாக செயல்பட்டுள்ளனர். ராமாயண நாடகத்தை பார்த்த நேரத்தில், தங்கள் கடமையிலும் அதிகாரிகள் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்”

என்று அதிருப்தி தெரிவித்துள்ளார்.