டெல்லி

ஜே பி நட்டா மாநிலக்களவை பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 24 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கி இரு தினங்களிலும் புதியதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்று குரல் வாக்கெடுப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், பாஜக எம்பியுமான ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார்.

இன்று மேல்சபையின் 264வது கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று ஜனாதிபதி உரையுடன் வழக்கமான நாடாளுமன்ற நிகழ்வுகள் தொடங்கின. ஜனாதிபதி உரை முடிந்த உடன் மாநிலங்களவையில் பிரதமர் மோடி மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

மாநிலங்களவையின் புதிய தலைவராக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தேசிய பாஜக தலைவருமான ஜே.பி.நட்டா அறிவிக்கப்பட்டார். அதே வேளையில் மக்களவை தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பில் உள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் உள்ளனர்.

ஏற்கனவே மாநிலங்களவை பா.ஜனதா தலைவராக இருந்த பியூஷ் கோயல் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, (மக்களவை) உறுப்பினராக பதவியேற்றதால் மாநிலங்களவை பாஜக தலைவராக ஜே.பி. நட்டா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.