சென்னை: ‘ஜன நாயகன்’ படம் மேல்முறையீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தில் 19ந்தேதி விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, எங்களின் கருத்து கேட்காமல் உத்தரவிடக்கூடாது என சென்சார் போர்டு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ படத்திற்கு தணிக்கை வழங்குவதில் இழுபறி நீடித்து வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சென்சார் போர்டு மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தலைமைநீதிபதி அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஜன.21-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த மேல்முறையீட்டு மனு விசாணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வரும் 19ந்தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், இந்த வழக்கில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை படத்தயாரிப்பு நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது, தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக்கூடாது என கூறியுள்ளது. இதனை தொடர்ந்தே ‘ஜன நாயகன்’ படம் தொடர்பான வழக்கு வரும் திங்ககிழமை (19.01.2026) உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
[youtube-feed feed=1]