சென்னை: சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மாலை ஐ.பி.எல் போட்டி நடைபெற உள்ள நிலையில், நாளை சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாளன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும் கார் பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கார்களை நிறுத்த அனுமதி அளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில், ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் .
நடப்பு ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் சென்னையில் நாளை (மார்ச் 23) 28 மற்றும் ஏப்ரல் 5, 11, 25, 30 ஆகிய தேதிகளில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. அன்றைய தினங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று பெருநகர சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் போட்டிகள் நடபெறும் அன்று மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் இருக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாஸ் வைத்திருப்பவர்களுக்கு மட்டும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கார்களை நிறுத்த அனுமதி அளிக்கப்படும்.
மைதானத்திற்கு செல்ல கார் பாஸ் இல்லாதவர்கள், கத்தீட்ரல் சாலையில் இருந்து ஆர்.கே. சாலை வழியாக சென்று காமராஜர் சாலையை அடைந்து, தங்கள் காரை மெரினா கடற்கரை சாலையில் நிறுத்திக் கொள்ளலாம். அதன் பின்னர், சுரங்க வழிப்பாதையை பயன்படுத்தி நடந்து சென்று மைதானத்தை அடையலாம்.
டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் அண்ணா சாலையைப் பயன்படுத்தி வாலாஜா சாலையை அடைந்து, அதன் பின்னர் மைதானம் அருகே தங்கள் பயணிகளை இறக்கி விடலாம். இதைத் தொடர்ந்து, சிவானந்தா சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிற்றுந்து, எம்.டி.சி பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் ஆகியவை வாலாஜா சாலையில் அனுமதிக்கப்படும். மேலும், சிவானந்தா சாலையில் மட்டுமே இவர்கள் பயணிகளை இறக்கி விடவும், அழைத்துச் செல்லவும் முடியும்.
பொதுமக்கள், பிரஸ் கிளப் சாலை வழியாக மைதானத்தை அடையலாம்.
இது தவிர பாரதி சாலை வழியாக சென்று மட்டுமே விக்டோரியா விடுதியை அடைய முடியும்.
வாலாஜா சாலையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெல்ஸ் சாலை ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
ரத்னா கஃபேயில் இருந்து காமராஜர் சாலை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் – வாலாஜா சாலை வழியாக திருப்பி விடப்படும்.
பொதுமக்கள், எம்.ஆர்.டி.எஸ் சேப்பாக்கம் ரயில் நிலையம் அல்லது அரசு எஸ்டேட் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை மூலம் வருகை தருமாறு அறிவுறுத்தப் படுகின்றனர்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.