சென்னை:  வேதாரண்யத்தில் தனியார் பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் கட்ட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளியின் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை  அரசு கையகப்படுத்தி புதிய பேருந்து நிலையம் கட்டி வந்த நிலையில்,  அதன் கட்டுமான பணிகளுக்கு உயர்நீதிமன்றம்  இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் அmறக்கட்டளை மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்கள் பல இடங்களில் உள்ளது. இந்த நிலையில், அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தை அரசு பறிமுதல் செய்து பேருந்து நிலையம் அமைப்பதாக அறக்கட்டளை சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக அறக்கட்டளை நிர்வாகியான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது  மனுவில், ‘வேதாரண்யத்தில் கஸ்தூர்பா காந்தி கன்னியா குருகுலம் மேல்நிலைப்பள்ளி கடந்த 75 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிக்குச் சொந்தமாக 15 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை அரசு கையகப்படுத்தி அங்கு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அந்த இடமானது,  பள்ளியின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு அந்த நிலம் தேவைப்படும் நிலையில், அந்த நிலத்தை பேருந்து நிலையம் அமைப்பதற்கு கையகப்படுத்தியிருப்பது தவறானது.

எனவே, எங்களது பள்ளிக்குச் சொந்தமான நிலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான உத்தரவையும் ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்த நிலையில், அதை எதிர்த்து   சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை  நேற்று (அக்.26)  நடைபெற்றது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், மரியா க்ளேட் ஆகியோர்   அமர்வு, வேதாரண்யத்தில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை தள்ளி வைத்தனர்.