டெல்லி: சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்திற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சென்னை கடற்கரை – வேளச்சேரி – பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் அமைக்கும் திட்டம் 1985-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. முதல் கட்டமாக 1997-ஆம் ஆண்டு கடற்கரை முதல் மயிலாப்பூா் இடையே 9 கிலோ மீட்டா் தொலைவுக்கு ரூ. 266 கோடியில் பாதை அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்டமாக ரூ. 877.59 கோடியில் மயிலாப்பூா் முதல் வேளச்சேரி வரை தொடங்கப்பட்டு கடந்த 2007-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. இந்தத் தடத்தில் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. அதனைத் தொடா்ந்து 3-ஆம் கட்டமாக 2008-ஆம் ஆண்டு பரங்கிமலை – வேளச்சேரி இடையே 5 கி.மீ. தொலைவுக்கு பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இதில் 4.5 கிலோ மீட்டா் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பணிகள் செப்டம்பர் மாதத்துக்குள் முடித்து நவம்பரில் ரயில்சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டம் பயன்பாட்டு வந்தால், கடற்கரை பகுதி, திருவல்லிக்கேணி, சாந்தோம்,  திருவான்மியூர், மயிலாப்பூரில் இருந்து பயணிகள் பரங்கிமலை வழியாக தாம்பரம், கிளாம்பாக்கம் வரை எளிதாக செல்ல முடியும்.

இதை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசின் கோரிக்கையை மத்தியஅரசு ஏற்றுள்ளது.  அதன்படி,  சென்னை வேளச்சேரி பறக்கும் ரயிலை, சென்னை மெட்ரோ ரயில் சேவையுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நீதி ஆயோக்கின் 10 -ஆவது ஆட்சிக்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தோடு ஒப்படைக்க நீதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரிடமும் கோரிக்கை வைத்தார்.

இந்த நிலையில், சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைப்பதற்கு ரயில்வே வாரியம் அனுமதி வழங்கியுள்ளது. சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை மாநில அரசிடம் ஒப்படைக்கும் கொள்கை அளவிலான ஒப்புதலை ரயில்வே வாரியம் வழங்கியுள்ளது.

இதற்கான இருதரப்புக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான பணிகள் அடுத்த 3 மாதத்திற்குள் நிறைவடையும். சென்னை பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துடன் இணைப்பதற்கான பணிகள் இந்தாண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.