சென்னை

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யபட்டுள்ளன.

தற்போது தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது. எனவே சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது.

நேற்று சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட்அலர்ட் விடுக்கப்பட்டாலும் மதியத்துக்கு பிறகு ஒரு துளி கூட மழை பெய்யவில்லை. எஅவே ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்ட நிலையில் இன்று அதிகாலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கடந்து சென்றது. அப்போதும் சென்னை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் எந்த சலனமும் ஏற்படவில்லை.

சென்னையில் கனமழை முற்றிலும் நின்று 24 மணி நேரம் கடந்த பிறகும் விமானப் பயணிகள் பலர் தங்களது பயணத்தை ரத்து செய்துள்ளனர். எனவே போதிய பயணிகள் இல்லாமல் சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் சென்னைக்கு வரவிருந்த 8 விமானங்களின் சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.