சென்னை: சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக,  பிரபல தமிழ்பட இயக்குனரின் ரூ.10 .11 கோடி சொத்துக்களை  அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இது தமிழ் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் அதிக பொருட் செலவில், பிரமாண்டமான படங்களை எடுப்பதில் முன்னணியில் இருப்பவர் இயக்குனர் ஷங்கர். இவர்மீதான சட்டவிரோத பண பரிவர்த்தனை  வழக்கில்,  ஷங்கருக்கு சொந்தமான ரூ.10 .11 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவின்  ஷங்கர் 1993 இல் வெளியான ‘ஜென்டில்மேன்’படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் உள்ளிட்டோரை வைத்து பல படங்களை இயக்கினார். இவரது இயக்கத்தில் வெளிவந்த இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், 2.0 போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. ஆனால் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர்மீதான புகார்களின் பேரில்,  சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஷங்கருக்கு  சொந்தமான 3 இடங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.10 .11 கோடி இருக்க கூடும் என அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமலாக்குத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.