டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80வது பிறந்தநாளையொட்டி, அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் இளந்தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல்காந்தி,  தனது சமூக வலைதளத்தில் நெகிழ்ச்சியாக தனது தந்தை குறித்து பதிவு செய்துள்ளார். அதில், உங்கள் கனவை நிறைவேற்றுவேன் என உறுதி தெரிவித்து உள்ளார்.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 80-ஆவது பிறந்தநாள் இன்று(ஆக. 20) நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி,  டெல்லி  வீர் பூமி பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அவரது மகனும் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி  இன்று காலை  கொட்டும் மழையில், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து  அவர் வெளியிட்டள்ள  எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் “அப்பா, நீங்கள் கற்பித்தவையே எனக்கு உத்வேகமளிக்கிறது, இந்தியாவுக்கான உங்களது கனவு என்னுடைய கனவுகளும்கூட – நான் அவற்றை நிறைவேற்றுவேன், உங்கள் நினைவுகளை என்னுடன் எடுத்துச் செல்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.