சென்னை:  பாஜகவின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன்  என்று கூறிய கர்நாடக மாநில துணைமுதல்வர் டி.கே.சிவகுமார்,  எங்களின் உரிமை களையும், தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்  ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ அமைத்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்வது தொடர்பான கூட்டத்துக்கு வருகை தந்த கர்நாடக மாநில துணைமுதல்வரை  விமான நிலையத்தில், தமிழக அமைச்சர்கள், எம்.பி.க்கள் மற்றும் மாநில  காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலர் வேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்,  “நான் இங்கே தமிழக முதல்வர் ஸ்டாலினின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன். இந்தக் கூட்டத்தைக் கூட்டியுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கூட்டாட்சி அமைப்பையும், அரசமைப்பையும் பேணுவதை எண்ணிப் பெருமைப்படுகிறோம். இப்படி இங்கே ஒன்றுகூடுவது என்பது ஒரு தொடக்கம்.

இந்த விவகாரத்தில் அடுத்தது என்னவென்பது பற்றி இன்றைய கூட்டத்தில் ஆலோசிப்போம்.  நாங்கள் அனைவரும் நாட்டின் நலனுக்காக ஒன்றிணைகிறோம். எங்கள் சுயலாபத்துக்காக அல்ல.  இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். தெலங்கானா, பஞ்சாப், கேரளா முதல்வர்கள் ஏற்கனவே வந்துள்ளனர். எக்காரணம் கொண்டும் எங்கள் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம். நாங்கள் ஒற்றுமையாக நின்று எங்கள் மாநிலங்களின் தொகுதிகள் குறையாமல் பார்த்துக் கொள்வோம்.

எங்கள் மாநிலங்கள் நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பை செலுத்துகின்றன. அப்படியிருக்க மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து கல்வி வளர்ச்சி, மக்கள் தொகை கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி என பங்களிப்பு செய்யும் மாநிலங்களைப் பழிவாங்கும் நடவடிக்கை.  நாங்கள் ஒருபோதும் மாநில உரிமைகளை விட்டுத்தர மாட்டோம். எங்கள் மாநிலங்களின் தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம்.” என்றார்.

இதையடுத்து செய்தியாளர்கள் பாஜகவின் கருப்புகொடி போராட்டம் குறித்து கேள்வி எழுப்பினர், கர்நாடகா, கேரளா மாநிலங்கள் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும்போது, அவர்களுக்கு திமுக அரசு  சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டுமா என கேள்வி எழுப்பி உள்ளனர்.  இதனால்,  முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம்  நடைபெற்று வருகிறது என்றனர்.

இதற்கு பதிலளித்த சிவகுமார், “அவர் எங்கள் மாநிலத்தில் அரசு அதிகாரியாக செயல்பட்டவர். இன்று அவர் வேறு ஒரு பாதையில் பணி செய்கிறார். அவர் பணியை அவர் செய்யட்டும். நாங்கள் எங்கள் வேலையைச் செய்கிறோம். பாஜகவின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன்  என்றார்.