டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி வர்மாவின் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தின்போது, ரூபாய்கள் கட்டுக்கட்டாக எரிந்துபோன  விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இநத் நிலையில், தீ விபத்தில் எரிந்த ரூபாய் நோட்டுகள் குறித்த எனக்கு தெரியாது, இது திட்டமிட்ட  சதி, தீவிபத்தில் பணம் எரிந்ததாக கூறப்படுவது குறித்து எனக்கு எதுவும் தெரியாது, எனது ஊழியர்கள் அந்த பணத்தைக் காண்பிக்கவில்லை என பதில்  அளித்துள்ளார்.

மார்ச் 14 அன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது, ​​அங்கு பணம் கண்டுபிடிக்கப்பட்டதற்கான முதல் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலாக, உச்ச நீதிமன்றம் கடந்த  சனிக்கிழமை  (மார்ச் 22ந்தேதி) அன்று உயர் நீதிமன்றத்தின் உள் விசாரணை அறிக்கையை வெளியிட்டது.

திருத்தப்பட்ட அறிக்கையில், டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, மார்ச் 21 தேதியிட்ட ஒரு கடிதத்தில், நீதிபதி வர்மாவிடம் தனது அதிகாரப்பூர்வ பங்களாவில் அமைந்துள்ள அறையில் “பணம்/ரொக்கம் இருந்ததற்கான கணக்கை” கேட்பதாக தெரிவிக்கப்பட்டிடருந்தது. அத்துடன்,  டெல்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோரா தலைமை நீதிபதி உபாத்யாயாவுடன் பகிர்ந்து கொண்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் உச்ச நீதிமன்றம் பதிவேற்றியது.

படங்கள் மற்றும் வீடியோவில், தீயணைப்பு வீரர் ஒருவர் பிளாஸ்டிக் பைகளில் பாதி எரிந்த பணத் துண்டங்களை வெளியே எடுப்பதைக் காட்டுகிறது. தீப்பிடித்த ரூபாய் நோட்டுகளில் இருந்த காந்தி படத்தைக் குறிப்பிட்டு, அங்கிருந்த ஒருவர்  “மகாத்மா காந்தி மே ஆக் லக் கயி (மகாத்மா காந்தி தீயில் எரிகிறார்)” என்று ஒருவர் கூறுவது வீடியோவில்  கேட்டது.

உயர்நீதிமன்ற அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, தலைமை நீதிபதி தனது முடிவை உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் மூத்த உறுப்பினருக்குத் தெரிவித்ததாக அறியப்படுகிறது. தலைமை நீதிபதி உபாத்யாயாவுக்கு அளித்த அதிகாரப்பூர்வ பதிலில் நீதிபதி வர்மா, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

“நாங்கள் உண்மையில் வசித்து வரும் மற்றும் ஒரு குடும்பமாகப் பயன்படுத்தும் வளாகத்தில் இருந்து எந்த நாணயமும் மீட்கப்படவில்லை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்,” என தெரிவித்திருந்தார்.

இதை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உயர்நீதிமன்ற நீதிபதி மீதான வர்மா மீதான குற்றச்சாட்டுகளை  விசாரிக்க மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டார்.  இதுதொடர்பாக, முதல்கட்ட விசாரணை நடத்துமாறு டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டிகே உபத்யாய்-க்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக,  டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்தியாய்க்கு, நீதிபதி வர்மா பதில் கடிதம் எழுதி உள்ளார்.  அதில், தீவிபத்தில் எரிந்ததாக கூறப்படும்  “அந்த பணம் குறித்து எனக்கோ எனது குடும்பத்தாருக்கோ எதுவும் தெரியாது. அந்தப் பணத்துடன் எங்களுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை.

துரதிருஷ்டவசமாக அன்றைய இரவில்  தீபிடித்த இடத்தில் இருந்து எடுத்ததாகக் கூறப்படும் பணம் எனது உறவினர்களிடமோ, பணியாளர்களிடமோ காட்டப்படவில்லை.

எனது வீட்டின் பொருள்கள் பாதுகாப்பு அறையில் இருந்து பண மூட்டை எடுக்கப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டினை நான் கடுமையாக மறுக்கிறேன், முற்றிலும் நிராகரிக்கிறேன்.

இந்த,  எரிந்து போன பண முட்டைகளை யாரும் எங்களுக்கு காட்டவோ, எங்களிடம் ஒப்படைக்கவோ இல்லை. உண்மையில் அன்று இரவில் அகற்ற முயன்ற எரிந்த குப்பைகளில் ஒரு பகுதி இன்னும் என் வீட்டில்தான் உள்ளது.

மார்ச் 14-15 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் எனது இல்லத்தின் பணியாளர்கள் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் பொருள்கள் பாதுகாப்பு அறையில் தீ பிடித்துள்ளது. அந்த அறையில் யாரும் பயன்படுத்தாத பொருள்கள் போட்டுவைத்திருப்போம்.  அந்த அறை எப்போது திறந்தே கிடக்கும் அந்த அறைக்கு முன்வாசல் கதவு மற்றும் பணியாளர்கள் குடியிருப்பின் பின்கதவு என 2வழியாகவும் செல்லலாம். அது பிரதான வீட்டின் ஒரு பகுதியாகவோ அல்லது ஊடகங்களில் சொல்லப்பட்டது போல எனது வீட்டின் ஒரு பகுதியாகவோ இல்லை.

தீ விபத்து நடந்த அன்று நானும் எனது மனைவியும் வீட்டில் இல்லை. மத்தியப்பிரதேசத்துக்குச் சென்றிருந்தோம். எனது மகளும் வயாதான தாயரும் மட்டுமே வீட்டில் இருந்தனர். 15ம் தேதி மாலையில்தான் நானும் எனது மனைவியும் டெல்லி திரும்பினோம். தீயை அணைக்கும் பணியின் போது பாதுகாப்பு காரணங்களுக்காக எனது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டு அவர்கள் மீண்டும் அங்கு வந்தபோது எந்தப் பணத்தையும் அவர்கள் பார்க்கவில்லை.

பொருள்கள் பாதுகாப்பு அறையில் நானோ எனது குடும்பத்தினரோ எந்தப் பணத்தையும் வைக்கவில்லை என்று நான் உறுதியாக கூறுகிறேன். அங்கிருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பணத்துக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. நானோ எனது குடும்பத்தினரோ பணத்தை அங்கு பதுக்கி வைத்திருந்தோம் எனக் கூறுவது முற்றிலும் அபத்தமானது.

அந்த பொருள்கள் பாதுகாப்பு அறை எனது வசிப்பிடத்தில் இருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. வெளிப்புறத்தில் இருந்து ஒரு சுற்றுச்சுவர் அதனை பிரிக்கிறது. என் மீது அவதூறுக் குற்றச்சாட்டினை சுமத்துவதற்கு முன்பு ஊடகங்கள் குறைந்தபட்சம் அதுகுறித்து என்னிடம் விசாரித்திருக்க வேண்டும்”

இவ்வாறு நீதிபதி வர்மா தெரிவித்துள்ளார்.

மேலும்,  டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தன்னிடம் வீடியோவை காட்டிய பிறகே, எரிந்த நிலையில் இருந்த பணம் குறித்து தனக்கு தெரிய வந்ததாக குறிப்பிட்டுள்ளா நீதிபதி வர்மா,  இந்த சம்பவம் “தன் மீது பொய் வழக்குப்பதிந்து அவதூறு பரப்புவதற்கான சதித்திட்டமாக இருக்கலாம் என்றும், என் மீது சுமத்தப்பட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் வெறும் மறைமுகமான குற்றச்சாட்டுகளே என்றும் வர்மா கூறினார்.

இதற்கிடையில் வர்மா மீதான குற்றச்சாட்டு காரணமாக,  நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் கடந்த 6 மாத போன் பதிவுகளை தர வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளது. அவர் தன்னுடைய மொபைல் போனிலிருந்து எந்தவொரு தரவுகளையும் அழிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.