ஈரோடு : உழவர் நலத்துறை சார்பில் ஈரோட்டில் வேளாண் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் வகையில் 200-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் பெருந்துறை வேளாண் கண்காட்சி தொடங்கி வைத்து, வேளாண் மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 4,533 பயனாளிகளுக்கு சுமார் ரூ.26 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மாவட்டத்தில் முடிவுற்ற அரசு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். மேலும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளையும் முதல்வர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நான் தோளில் பச்சை துண்டுபோட்டுக்கொண்டு வேஷம் போடும் போலி விவசாயி அல்ல என்று கூறியதுடன், விவசாயிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்றார். விவசாயிகளால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்று கூறியவர், விவசாயிகளின் விவசாயத்துக்கு மட்டும் தமிழ்நாடு அரசு ரூ.26,232 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறினார்.
இன்று மாலை சேலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஈரோட்டில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் நடக்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கினை தொடங்கி வைத்து ரூ.26 கோடி மதிப்பீட்டில் 4,533 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை விஜயமங்கலம் சுங்கசாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு இன்று (11ம் தேதி), நாளை (12ம்தேதி) ஆகிய இரண்டு நாள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து கண்காட்சியை பார்வையிட்டார்.

இந்த கண்காட்சியில் அரசு மற்றும் தனியார் சார்பில் 218 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் தோட்டக்கலை தொழில் நுட்பங்கள், புதிய ரக வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் விதைகள், ஒட்டு ரக பழ மரங்கள், தென்னங்கன்றுகள், பிற வகை மரக்கன்றுகள், வேளாண் இயற்திரங்கள், கருவிகள் விற்பனை, உயர் ரக கால்நடைகள் மற்றும் வளர்ப்பு முறைகள், மீன் வளர்ப்பு, வேளாண்மையில் வங்கி சேவைகள் போன்றவை குறித்து இடம் பெற்றுள்ளன.
இதைத்தொடர்ந்து கண்காட்சியில், 25 தலைப்புகளின் கீழ் வேளாண் வல்லுநர்கள் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் மூலம் கருத்தரங்கமும் நடக்க உள்ளது. இந்த வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்றுள்ளனர்.