டெல்லி: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில்  பேஸ்-2 பேஸ்-2 மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி எவ்வளவு?  என்பது குறித்த  நாடாளுமன்றத்தில்  மத்தியஅரசு தகவல் தெரிவித்துள்ளது.

வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி சென்னையில் நடைபெற்று வரும்  பேஸ்1, பேஸ்2 மெட்ரோ திட்டங்களுக்கான நிதி குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் கூறிய  மத்திய அமைச்சர் டோகன் சாகு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் பல்வேறு கட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் தற்போதைய நிலை குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

 54 கி.மீ. தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரயில் ‘பேஸ்-1’ முதற்கட்ட திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.22,149.92 கோடி வழங்க ஒப்புதல் அளித்தது. இதில் ரூ.15,355.78 கோடி இதுவரை வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு, தற்போது சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பாட்டில் உள்ளது. இது நகரின் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்து, பயணிகளுக்குப் பெரும் வசதியை அளித்து வருகிறது.

 மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து 50:50 என்ற விகிதத்தில் நிதி செலவிடும் வகையில், ரூ.63,246.4 கோடி மதிப்பில் ‘பேஸ்-2’ திட்டத்தை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ.5,554.15 கோடி வழங்கியுள்ளது. மாநில அரசு இந்தத் திட்டத்திற்காகத் தேவையான கடன்களைப் பெறுவதற்கும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த இரண்டாம் கட்டத் திட்டம் சென்னையின் மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தி, அதிகப் பகுதிகளுக்குப் போக்குவரத்து வசதியை கொண்டு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட இந்தத் தகவல்கள், சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால விரிவாக்கத்திற்கான திட்டங்களை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.