லக்னோ: ஹோலி பண்டிகையை முன்னிட்டு, ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் உள்ள ஷாகி ஜமா மசூதி உள்பட 10 மசூதிகளை தார்ப்பாய் திரையிட்டு மூட உ.பி. மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

60 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாக ஹிந்துக்கள் கொண்டாடும் ஹோலி பண்டிகையும் முஸ்லிம்கள் கொண்டாடும் ரமலானின் ஜும்மா நோன்பும் நாளை (மார்ச் 14 ) ஒரே நாளில் வருகிறது. அன்றைய தினம், ‘சௌபாய்’ எனப்படும் ஊர்வலம் நடைபெறும் பாதையில் சம்பல் பகுதியில் நடைபெற உள்ளது. அதனால், அந்த பாதையில் ஜாமா மசூதி உள்பட10 மசூதிகளை தார்ப்பாய் போட்டு மூட காவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உ.பி. சம்பல் மாவட்ட எஸ்பி ஷ்ரீஷ் சந்திரா, “இரு சமூகங்களும் தங்களின் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காகவும், சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும், ஹோலி பண்டிகையை முன்னிட்டு மசூதிகள் தார்ப்பாய் போட்டு மூடப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் மூட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. . இதன்படி ஹோலியன்று சம்பலில் உள்ள ஷாகி ஜமா மசூதி, லடானியா வாலி மசூதி, தானே வாலி மசூதி, ஏக ராத் மசூதி, குருத்வாரா சாலை மசூதி, கோல் மசூதி, கஜூர் வாலி மசூதி, அனார் வாலி மசூதி மற்றும் கோல் துக்கான் வாலி மசூதி ஆகிய பத்து மசூதிகள் திரையிட்டு மூடப்படவுள்ளன
இது பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வழக்கமான ஒன்றுதான்” என்று கூறியவர், இரு சமூகங்களுக்கிடையே எந்தக் குழப்பமோ பதற்றமோ ஏற்படாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், மேலும், குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை நாளன்று தொழுகையின் நேரம் சௌபாய் ஊர்வலத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், மதக் கலவரம் எதுவும் நடைபெறாமல் இருக்க இரு சமூகத்தின் தலைவர்களும் சம்பல் காவல்துறையினரால் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருப்பதாகவும், ஊர்வலத்திற்கு முன்போ பின்போ வெள்ளிக்கிழமை தொழுகைக்கான நேரம் மாற்றம் செய்யப்படும் என்றும், அந்த நாள்களில் வெளியாட்கள் மசூதிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். உள்ளூர் அதிகாரிகள், உ.பி. காவல் துறையினர் ஆகியோருக்கு குறிப்பிட்ட நாளில் எந்தவித குற்றச் சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மிகக் கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]