சென்னை: தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதுபோல பணி செய்யும் பெண்களுக்கான தோழி விடுதி கட்டுவதற்கு எதிரான மனுவையும் உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்தது .

ஆவின் நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி லட்சமி நாராயணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆவின் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்யும் பிரத்யேக வாகனங்களுக்கான டெண்டரில் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத வாகனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது. மேலும் டெண்டர் இறுதி செய்வதற்கு முன்பே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசு வாதிட்டது.

அரசின் வாதத்தை ஏற்று ஞானசேகரன் என்பவர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம். அத்துடன் அரசின் உத்தரவாதத்தை பின்பற்றி டெண்டர் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவின் நிறுவனத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

மற்றொரு அமர்வில்,   சென்னை பல்கலைக்கழகம் வளாகத்தில் பணிபுரியும் பெண்களுக்கான தோழி விடுதி கட்டுவதை எதிர்த்து தடை கோரிய வழக்கை நீதிபதிகள்  அபராதத்துடன் தள்ளுபடி செய்தனர். வழக்கின் விசாரணையின்போது,  எம்.ஏ. படிக்கும் மாணவர் நவீன்  தோழி விடுதி கட்டும் பணிக்கு தடை விதிக்கக்கோரி தொடர்ந்த வழக்கை  ரூ.10,000 அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.