மதுரை: வி.ஏ.ஓ பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை காலிப் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில்   வி.ஏ.ஓ பணியிட மாறுதல்  கலந்தாய்வுக்கு முன்னரே புதியதாக காலியாக உள்ள பணியிடங்களை நிரம்ப தமிழ்நாடு அரசு தயாரானது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  கலந்தாய்வு முடியும் வரை, 218 காலிப் பணியிடங்களை நேரடி முறையில் நிரப்ப டி.என்.பி.எஸ்.சி-க்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க பொதுச்செயலாளர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது ஃபயஸ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில்  தாக்கல் மனுவில்,   ‘தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மாவட்ட அளவில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கிய பிறகு காலியுள்ள கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பலாம்.

ஏற்கெனவே, கிராம நிர்வாக அலுவலர்களின் முதுநிலை பட்டியலை கருத்தில் கொள்ளாமல், பணியில் சேர்ந்த தேதி அடிப்படையாகக் கொண்டு மாவட்ட மாறுதல் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவது தவறு எனக் கூறி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்தச் சூழலில் 218 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப முடிவு செய்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு அரசு பட்டியலை அனுப்பியுள்ளது. இதனால், இடமாறுதலுக்காக பல ஆண்டுகளாக காத்திருப்பவர்களின் வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.

எனவே, 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை மாவட்ட பணியிட மாறுதல் மூலம் நிரப்பாமல் நேரடி நியமனம் மூலம் நிரப்ப டி.என்.பி.எஸ்.சி-க்கு இடைக்கால தடை விதித்தும், தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதல் கோரிய மனுக்களை பரிசீலித்து அவர்களுக்கு உரிய இடங்களில் இடமாறுதல் வழங்கிய பிறகு நேரடி முறையில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி குமரேஷ்பாபு முன்பு  நடைபெற்றது. இதுதொடர்பாக இரு தரப்பு வாதங்களையும்கேட்ட நீதிபதி, மாவட்ட பணியிட மாறுதல் நடத்தாமல் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி முறையில் டி.என்.பி.எஸ்.சி நிரப்ப தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

மேலும், “இந்த மனு தொடர்பாக வருவாய் துறை ஆணையர், டி.என்.பி.எஸ்.பி தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.