கமதாபாத்

நேற்றைய ஐ பி எல் போட்டியில் மும்பை அணியை வென்ற குஜராத் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.

நேற்று அகமதாபாத்தில் நடந்த குவாலிஃபையர் சுற்றின் இரண்டாம் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைடன் அணிகள் மோதின,   இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதும் என்பதால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சு தேர்வு செய்தது. இதன் படி குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சஹா, சுப்மன் கில் களமிறங்கினர். சஹா 18 ரன்னில் அவுட் ஆனார். ஆனால், அடுத்து வந்த சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்த சுப்மன் கில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சுப்மன் கில் 60 பந்துகளில் 7 பவுண்டர்கள், 10 சிக்சர்கள் உள்பட 129 ரன்கள் குவித்து அவுட் ஆனார். சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் குவித்தது.

இதையடுத்து, 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் மும்பை தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, நேஹல் வதேரா களமிறங்கினர். வதேரா 4 ரன்னிலும், கேப்டன் ரோகித் சர்மா 8 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா 43 ரன்னிலும், கமரூன் கிரீன் 30 ரன்னிலும் அவுட் ஆகினர்.

சற்று நிலைத்து நின்று ஆடிய சூர்யகுமார் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். ஆனால், அடுத்து வந்த விஷ்னு வினோத் 5 ரன்னிலும், டிம் டேவிட் 2 ரன்னிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய ஜோர்டன் 2 ரன்னிலும், சாவ்லா ரன் எதுவும் எடுக்காமலும் (0) ஆட்டமிழந்தனர்.

இறுதியில் மும்பை இந்தியன்ஸ் 18.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்சை 62 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றிபெற்றது. சிறப்பாகப் பந்து வீசிய மோஹித் சர்மா 2.2 ஓவரில் 10 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் குஜராத் டைட்டன்ஸ் நுழைந்துள்ளது. வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் , சென்னை சூப்பர் கிங்சை எதிர்கொள்ள உள்ளது.