சென்னை: இளைஞர்கள் சமுதாயம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற குரூப்4 தேர்வு முடிவுகள் தீபாவளிக்கு முன்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று அல்லது நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சுமார் 15.8 லட்சம் பேர்  கலந்துகொண்ட குரூப் 4 பணிகளுக்கான தேர்வு  ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது. மாநிலம் முழுவதும்  இந்த தேர்வுகள் நடைபெற்ற நிலையில்,  குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்வு மூலம் குரூப் 4 பிரிவில் 8,932 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முன்னதாக, தமிழக அரசு பணிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்  வகையில்  8,932 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30ம் தேதி வெளியானது.  அதன்படி,  கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், தனி உதவியாளர், கிளார்க் என பல பணிகளுக்கு தேர்வு நடைபெற்றது. ஆன்லைன் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு ஜூன் 9ம் தேதி தமிழகம் முழுவதும் தேர்வு நடைபெற்றது.  இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

அரசு பணியாளர் தேர்வு எழுதி பல மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே தேர்வு முடிவுகளை 3 மாதங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் படி 3மாத காலத்திற்குள் அதாவது குரூப் 4 தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதனை தொடர்ந்து குரூப் 4 முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வு எழுதியவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தீபாவளிக்கு முன்னதாக முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் எந்த தேதியில் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகளை வெளியிடுவது என்பது குறித்து முடிவெடுப்பதற்காக தேர்வாணையத்தின் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளை தீபாவளிக்கு முன்னதாக நாளை மறுதினம்( இரண்டு நாட்களுக்குள்) வெளியிடப்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது