சென்னை: தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்து உள்ளது. மேலும் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வைத்த குற்றச்சாட்டுக்கு ஆளுநர் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இன்று  ‘ஹிந்தி மாத’ நிகழ்ச்சி  கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி  பாடாமல் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், இந்த நிகழ்வு தமிழ் ஆர்வலர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ஆளுநர் ரவி,  திராவிடம் குறித்து  கடுமையாக  விமர்சித்து வரும் சூழலில் தற்போது திராவிடம் என்று வார்த்தை  தவிர்க்கப்பட்டது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் பொதிகை தொலைக்காட்சி தவறுக்காக மன்னிப்பு கோரி உள்ளது.

இந்த நிலையில்,  தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து  ஆளுநர் ஆலோசகர் விளக்கம் வெளியிட்டு உள்ளார்.

அவரது விளக்க அறிக்கையில்,  தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடியில் ஆளுநருக்கோ, ஆளுநர் மாளிகைக்கோ தொடர்பில்லை. தமிழ் மற்றும் தமிழ் உணர்வு மீது ஆளுநருக்கு அதீத மரியாதை உண்டு என்று கூறப்பட்டு உள்ளதுடன், தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழுவினரே “தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்” வரிகளை தவறவிட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது  ஆளுநரின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக, இதுகுறித்து ஆளுநர் மாளிகையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார்.

பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.  ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன்.

அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் குவாஹாட்டி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஒரு ஆளுநருக்கு எதிராக முதல்வர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதல்வரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.

தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதல்வர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.” –

ஆளுநர் ரவி.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.