கலிபோர்னியா:
கூகுள் நிறுவனத்தில் இருந்து கருப்பின அதிகாரி நீக்கப்பட்டதற்கு கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வருத்தம் தெரிவித்துள்ளார்.

கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவில் செயல்பட்ட ஒரு கருப்பின விஞ்ஞானி கடந்த வாரம் வெளியேறியது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு ஆய்வுக்கட்டுரை தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து கூகுளின் செயற்கை நுண்ணறிவு பிரிவை வழிநடத்திய டிம்னிட் கெப்ரு (Timnit Gebru) என்பவர் தனது சக ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்கள் மீது நிறம் மற்றும் பாலின ரீதியில் பாகுபாடு காட்டுவதாக விமர்சித்திருந்தார். இதையடுத்து கூகுள் நிறுவனத்தில் இருந்து கெப்ரு நீக்கப்பட்ட நிலையில், கூகுளின் ஊழியர்கள் 2000க்கும் மேற்பட்டோர் கெப்ருவின் நீக்கம் குறித்து நிறுவனத்திற்கு கடிதம் எழுதினர்.

இந்நிலையில் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய சுந்தர் பிச்சை, நடந்தவற்றுக்கு தான் மன்னிப்பு கோருவதாகவும், ஊழியர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.