சென்னை; கொடுங்கையூரில் குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி என்றும், திட்டமிட்டபடி ஆலை அமைக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் குப்பை கிடங்கில் 1248 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரி உலைகள் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த திட்டத்தை செயல்படுத்துவதும், சென்னை மாகராட்சியும், திமுக அரசும் முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், இந்த திட்டத்திற்கு சமுக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வடசென்னை மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆனால், பொதுமக்களின் எதிர்ப்பை மீறி எரிபொருள் எடுக்கும் ஆலை அமைப்பது உறுதி என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 30ந்தேதி) நடைபெற்ற சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தின் நேரமில்லா நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினா் ஜெ.டில்லிபாபு, இதுகுறித்து பேசினார். அப்போது, குப்பையிலிருந்து எரிபொருள் எடுக்கும் திட்டம் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் கொடுங்கையூா் குப்பைக் கிடங்கை சுற்றி சுமாா் 8லட்சம் மக்கள் வசித்து வருகின்றனா். ஏற்கெனவே வடசென்னையில் அதிக அளவில் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், காற்றுமாசு ஏற்பட்டு அப்பகுதி மக்கள் சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
தற்போது வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் மூலம் பல்வேறு மேம்பாட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கொடுங்கையூா் குப்பைக் கிடங்குகளில் குப்பை யிலிருந்து எரிபொருள் எடுக்கும் திட்டத்தால், அப்பகுதி மக்கள் மேலும் பாதிப்படைய வாய்ப்புள்ளது. அதனால், அத்திட்டத்தை குடியிருப்பு இல்லாத பகுதியில் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்தாா்.
இதற்கு பதில் கூறிய மேயர் பிரியா, ‘கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் நீண்ட காலம் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பையால் நிலத்தடி நீா் அதிகம் பாதிக்கப்படுகிறது. இது எதிா்காலத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். கொடுங்கையூா் குப்பைக் கிடங்கில் ஏற்கெனவே பையோ மைனிங், பையோ சிஎன்ஜி முறையில் குப்பைகள் அகற்றப்படுகிறது. இதனால், மீதமுள்ள குப்பைகள் மட்டும்தான் இத்திட்டத்தில் பயன்படுத்தப்படும்.
ஒரு பொருளை 500-600 டிகிரி செல்சியஸில் எரிக்கும்போது மட்டும்தான் நச்சுத்தன்மை வெளியேறும். இத்திட்டத்தில் 800 டிகிரி செல்சியஸில் எரிக்கப்படுவதால் நச்சுத்தன்மை வெளியேறாது.
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ், தெலங்கானா மாநில ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. குப்பையை எரிக்கும் இடத்தில் நச்சு வாயு வெளியேறாத வகையில் கட்டமைக்கப்படும். இதனால் பொதுமக்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இருக்காது. குப்பைகள் முழுவதுமாக அகற்றப்பட்ட பிறகு அப்பகுதியில் மரங்கள் நடப்படும் என்றாா் . தற்போது சென்னையில் குப்பை கழிவுகளில் மின்னணு கழிவுகள் தனியாக அகற்றப்படுகிறது. அதனால், இத்திட்டத்தில் மின்னணு கழிவுகள் கலக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கொடுங்கையூர் குப்பை எரி உலை திட்டத்துக்கு எதிர்ப்பு: மே 25-ல் மனித சங்கிலி போராட்டம் அறிவிப்பு…