சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை முதல் சென்னையில் மழை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது

ஏற்கனவே வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என்றும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் அறிவித்திருந்தது. இன்று வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம்,,

“தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை நிறைவு பெற்று வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வட தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளுக்கு நகரும்.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வட திசை நோக்கி நகர்வதால் கனமழை நீடிக்கும். இதன்படி அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அக்., 1-ம் தேதி முதல் தற்போது வரை 12 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இது இயல்பை விட 84 சதவீதம் அதிகமாகும்.

சென்னைக்கு இன்றும் ரெட் அலர்ட் கொடுத்துள்ளோம். சென்னையில் ஒரு சில பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. அடுத்த 4 தினங்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்

என்று தெரிவித்துள்ளார்.