
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று (ஆக., 15) கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி காலை 7.30 மணியளவில் டில்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச்செயலகமான கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின விழா நாள் வாழ்த்துக்கள். தியாகிகளை போற்றுவோம். தியாகிகளை பெயரளவில் நினைவு கூர்ந்து மறப்பவர்கள் நாம் அல்ல. தமிழகத்தில் தியாகிகளுக்கு மணிமண்டபம், நினைவுச் சின்னங்கள் பெரும்பாலும் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டவையே.
தமிழகத்திற்கு 20 முறை வந்துள்ள மகாத்மா காந்தி, மதுரையில் தான் அரை ஆடை அணியும முடிவை எடுத்தார். சென்னை அருங்காட்சியக வளாகத்தில் காந்தி சிலை அமைத்துள்ளோம். காக்கும் கரங்கள் திட்டத்தை ஆகஸ்ட் 19ல் தொடங்கி வைக்கவுள்ளேன்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது பட்ஜெட்டில் கணித்ததை விட 1.5 சதவீதம் கூடுதலாகும். சமூக முன்னேற்ற குறியீடுகளில் 63.33 புள்ளிகளுடன் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது. ஜவுளி, தோல் ஏற்றுமதி மாநிலங்களில் தமிழகம் முன்னிலை என அரசின் பெருமைகளை பறைசாற்றினார்.
அதிகாரப்பகிர்வில் மாநில அரசுகளின் பங்கு தொடர்ந்து குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் மாநில அரசின் உரிமைகள் பறிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மாநில அரசின் நிதிப் பங்கீட்டிலும் பாரபட்சம் காட்டுகிறது. இதற்கு முடிவு கட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு
இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

9 அறிவிப்புகள்
1) விடுதலை போராட்ட வீரர்களின் ஓய்வூதியம் ரூ.22 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
2) தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.
3) வீரபாண்டிய கட்டபொம்மன், மன்னர் முத்துராமலிங்க சேதுபதிகள், மருது சகோதரர்கள், வஉசி ஆகியோரின் வழிதோன்றல்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11,000ஆக உயர்த்தப்படும்.
5) 2ம் உலகப்போரில் பங்கேற்று உயிர்நீத்த வீரர்களின் மனைவிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர நிதியுதவி ரூ.8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
7) தமிழகத்தில் மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
8) ஓட்டுநர் பயிற்சி பெற மாநில அளவில் ஒரு பயிற்சி மையம், மண்டல அளவில் இரு பயிற்சி மையங்களும், மாவட்டத்திற்கு ஓர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.
9) தமிழக கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் குழந்தைகள் கல்லூரியில் படிக்கும் போது, திறனை மேம்படுத்த 10,000 மாணவர்களுக்கு ரூ.15 கோடி செலவில் இணையவழியில் திறன் மேம்பாட்டு சேவை வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.