
சென்னை:
தன்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என அறிவிக்க கோரி, பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற இளம்பெண் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அம்ருதா மோசடி பேர்வழி என்றும், ஜெ.வின் சொத்துக்களை அபகரிக்கவே அவர் வழக்கு தொடுத்துள்ளார் என்று கூறி உள்ளார்.
ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும் என்று அம்ருதா உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது, அதை நிராகரித்த உச்சநீதி மன்றம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர அறிவுறுத்தியது. அதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் அம்ருதா கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 14.8.1980 அன்று நான் ஜெயலலிதாவுக்கு மகளாகப் பிறந்தேன். மூன்று மாத குழந்தையாக இருந்தபோதே ஜெயலலிதாவின் சகோதரியான சைலஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டேன். தற்போதுதான் நான் ஜெயலலிதாவின் மகள் என்பது உறவினர்கள் மூலமாக எனக்கு தெரியவந்தது. ஜெயலலிதாவின் உடலைத் தோண்டியெடுத்து குலவழக்கப்படி சம்பிரதாய சடங்குகளைச் செய்ய தன்னை அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையின்போது, தமிழக அரசு மற்றும் ஜெ.தீபா, தீபக் பதில் அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது, நீதிபதி பல கேள்விகளை எழுப்பி உள்ளார். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில், ஜெயலலிதாவின் ரத்த மாதிரி இருக்கிறதா? என்றும், ஜெயலலிதாவை அம்மா என்று உரிமை கோரும் அம்ருதா, சோபன்பாபுவை அப்பா என்று உரிமை கோராதது ஏன் என்றும், அதை கூற எது தடுக்கிறது என்றும் நீதிபதி வைத்தியநாதன் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தீபக் அளித்த பதில் மனுவில், “என் அத்தை ஜெயலலிதா வின் சொத்துகளைக் குறிவைத்தே அம்ருதா அவரின் மகள் எனக்கூறி பொய்யான வழக்கை தொடர்ந்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சைலஜா என்ற சகோதரியே கிடையாது. என் பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா மற்றும் ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். எனவே, அம்ருதாவின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் பதில் மனுத்தாக்கல் செய்ய அரசுத் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா இன்று உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில், “என் பாட்டி சந்தியாவுக்கு ஜெயலலிதா, ஜெயக்குமார் மட்டுமே வாரிசுகள். ஜெயலலிதாவின் சொத்துகளை அபகரிக்கவே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளார். மோசடி பேர்வழி அம்ருதா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கு விசாரணையை நாளைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.