சென்னை: தமிழ்நாட்டில் பாக்ஸ்கானின் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு உறுதியாக வரும் என சட்டப்பேரவையில் தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தமிழ்நாடு அரசு பாக்ஸ்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளதாகவும், இதன்மூலம் 14ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என புகைப்படத்துடன், அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதுதொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. பாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் ராபர்ட் வூ, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில், ‘தமிழகத்தில் பாக்ஸ்கான் நிறுவனம், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது’ என, அமைச்சர் ராஜா தெரிவித்திருந்தார்.

இதற்கு பாக்ஸ்கான் தரப்பில், ‘புதிய முதலீடுகள் எதுவும் விவாதிக்கப்படவில்லை’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பாக்ஸ்கான் நிறுவனத்தின் முதலீடு உண்மையா என்ற சந்தேகம் எழுந்தது. அதை அதிமுக, பாமக, பாஜக என எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.

இந்த நிலையில், பாக்ஸ்கான் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா,  தமிழ்நாட்டில் பாக்ஸ்கான் நிச்சயமாக முதலீடு செய்யும். கூறியபடி ரூ.15ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும், இந்த  முதலீடு மூலம் 14 ஆயிரம் பொறியாளர்களுக்கு நிச்சயம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதலீடாக மாற்றும் ‘கன்வர்ஷன் ரேட்’ 77% ஆக உள்ளது. அண்டை மாநிலங்களுக்கு வந்த முதலீடு குறித்து நான் பேசவில்லை; அதில் அரசியல் உள்ளது. எந்த முதலீடுகள் எல்லாம் வேலைவாய்ப்பாக மாறுமோ, அதை மட்டும் தான் புரிந்துணர்வு ஒப்பந்தமாக தமிழ்நாடு அரசு கையெழுத்திடுகிறது. இதுவரை போடப்பபட்ட எந்தவொரு ஒப்பந்தமும் ரத்து செய்யப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

ஆந்திராவில் கூகுள் நிறுவனம் முதலீடு செய்வது குறித்த அதிமுகவின் கேள்விக்கு பதில் கூறிய அமைச்சர்,  கூகுள் பிரச்சனையில் அதானியின் தலையீடும் உள்ளது என பதில் தெரிவித்தார்

அமெரிக்கா – இந்தியா பிரச்சனையில் நாம் அரசியல் செய்யக்கூடாது.  மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார் என்றும் கூறினார்.