சென்னை மதுரவாயலில் நிலத்தகராறு தொடர்பாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. விருகை வி.என். ரவி-யின் தம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு கடற்கரைச் சாலை பாலவாக்கம், அண்ணா சாலையைச் சேர்ந்தவர் குமரேசன். இவர் மதுரவாயல், ராஜலட்சுமி நகரில் 1992ம் ஆண்டு 4,800 சதுர அடியில் நிலம் வாங்கி உள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு அந்த நிலத்தை இடத்தை சுத்தம் செய்ய சென்றபோது மற்றொரு நபர் அவருடைய இடம் என அந்த இடத்தை அபகரிக்க முயன்றதால், இது குறித்து நில அபகரிப்பு பிரிவில் குமரேசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸ் பாதுகாப்புடன், குமரேசன் அவரது இடத்தை மீட்டெடுத்து சுற்றுசுவர் அமைத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் அந்த இடத்தைப் பார்க்கச் சென்ற குமரேசனை அந்த இடத்திற்குள் நுழைய விடாமல் தடுத்த விருகம்பாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வி.என். ரவியின் தம்பியும் நிலத்தரகர் சங்க மாநில தலைவருமான வி.என். கண்ணன் அங்கு மற்றொரு பூட்டை போட்டு பூட்டி உள்ளே செல்லவிடாமல் செய்ததோடு குமரேசனுக்கு கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வி.என். கண்ணன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து கண்ணன் உள்ளிட்ட 10 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து வி.என். கண்ணன் தலைமறைவான நிலையில் அவரை மதுரவாயல் காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.