சென்னை:  போலி உறுப்பினர் சேர்க்கை குறித்து திமுகவினருடன்ன உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுகவினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

இன்று நடைபெற்ற உடன்பிறப்பே வா கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,  இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. உறுப்பினர் சேர்க்கையில் போலி உறுப்பினர் சேர்க்கப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்‘ என்று எச்சரித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தி.மு.க. மாவட்டக் கழக செயலாளர்கள் கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்தினார். இந்த கூட்டத்தில் 76 மாவட்டக் கழக செயலாளர்களும், மாநகர செயலாளர்களும் இணைந்திருந்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் தனது இல்லத்தில் இருந்தபடி காணொலியில் கூட்டத்தை நடத்தினார்.

அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணா அறிவாலயத்தில் இருந்தபடி வரவேற்று பேசினார். அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து விரிவாக கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழ்நாட்டோட மண்-மொழி-மானம் காக்கவும், நம்மோட திராவிட மாடல் அரசின் சாதனைகளை எடுத்துச் சொல்லி தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர வீடு வீடாக போய் பரப்புரை மேற்கொள்ளவும், கழகத்தில் அவர்களை உறுப்பினர்களாக சேர்க்கவும், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை கடந்த 3-ந்தேதி தொடங்கினோம். தமிழ்நாட்டு மக்களை ஓரணியில் கொண்டுவர மக்களைத் தேடி வீடு வீடாகச் செல்கிறோம் என்பது மகிழ்ச்சி. செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் வரவேற்பு நன்றாக உள்ளது என கேள்விப்படும் போது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் உழைக்கும் ஒவ்வொரு கழக உடன் பிறப்புக்கும் என் தலை தாழ்ந்த வணக்கம். நன்றி. நமக்கு இன்னமும் 30 நாள் இருக்கிறது. எண்ணிக்கைக்கு நாம் கொடுக்கும் அதே அளவு முக்கியத்துவத்தை ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது நம் கழகத்தினர் கலந்துரையாடுவதை நாம் உறுதி செய்திட வேண்டும். ஒன்றிய பாஜக அரசு மற்றும் அதன் கூட்டணியாக இயங்கிக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள், தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ள மற்றும் இழைக்கவுள்ள அநீதியை ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் எடுத்து சொல்வது தான் இந்த முன்னெடுப்பின் நோக்கம்.

அடுத்த 30 நாட்களில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 68 ஆயிரம் வாக்குச் சாவடிகளிலும் சேர்த்து 2.5 கோடி பேரை கழக உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். நாம உருவாக்கியிருக்கும் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட்கள் கழகத்துக்கு மிகப்பெரிய சொத்து. அவர்களை எதிர் வரும் சட்டன்றத் தேர்தலுக்கும் தேர்தலை கடந்தும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் போலி வாக்காளர் சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்களின் விவரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுகிறது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் நாம் வழங்கிய நடைமுறையை சரியாக கடைபிடிக்கவில்லையெனில் அங்கெல்லாம் மீண்டும் முதலில் இருந்து தொடங்குவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.