சென்னை: இன்றைய நாள் வரலாற்றில் பொறிக்கப்படும் முக்கிய நாள் என முதலமைச்சர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
இன்று தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறும் நிலையில், இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு நாடு முழுவதும் அடுத்த ஆண்டு (2026) தொகுதி மறுவரையறை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியும் சீரான மக்கள்தொகை கொண்டதாக அமைய வேண்டும் என்ற நோக்கில், இப்படி வரையறுக்கப்படுகின்றன. எனவே, பெரும்பாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும். தனித்தொகுதிகளை வரையறை செய்வதும் இந்தப் பணியில் அடங்கும்.
ஆனால், 1976-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அறிவித்த நெருக்கடிநிலையின்போது அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 42-வது திருத்தம், 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரை மறுவரையறை செய்யப்படக் கூடாது என்று கூறியது.
நெருக்கடிநிலையின்போது குடும்பக் கட்டுப்பாடுத் திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டதால், அதன் அடிப்படையில் சில மாநிலங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைப்பதற்கு ஏதுவாக இந்தக் காலநீட்டிப்பு செய்யப்பட்டது. ஆனால், இதன் காரணமாக, மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு, 2001-ல் அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின்படி 2032-ல்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்.
எனினும், தொகுதிகளின் எண்ணிக்கையைக் கூட்டவோ குறைக்கவோ செய்யாமல் தொகுதிகளின் எல்லையை மட்டும் 2002-ல் கூடிய மறுவரையறைக் குழு மாற்றியமைத்தது. அதன்படி, தொகுதிகளின் எல்லையை மாற்ற மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் 2026ம் ஆண்டு தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இதன் காரணமாக, எந்தவொரு மாநிலங்களிலும் தொகுதிகள் குறையாது என்று மத்தியஅரசு கூறி வருகிறது.
இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு மாநில வாரியாக மக்கள்தொகை அடிப்படையில் இந்த பணிகள் நடைபெறும் என்பதால், தமிழ்நாடு போன்ற மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்திய மாநிலங்களில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்று கூறப்படுகிறது. எனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதுதொடர்பாக மார்ச் 5ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. 58 கட்சிகள் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில், தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களுக்கு திமுக அமைச்சர்களும், எம்.பி.க்களும் சென்று நேரடியாக அழைப்பு விடுத்து வந்தனர்.
அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் இன்று (மார்ச் 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், பங்கேற்க கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடகா துணைமுதல்வர் டிகே சிவகுமார் உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்துகொள்கின்றனர்.
இந்த நிலையில், இந்த கூட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
“நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய மாநிலங்கள், நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம், அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்றைய தினம் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முக்கியமான நாள். நியாயமான தொகுதி மறுவரையறை மூலம் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒருங்கிணைவோம். தொகுதி மறுசீரமைப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களையும் இந்தக் கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன்”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Today will be etched in history as the day when states that have contributed to our nation’s development came together to safeguard its federal structure by ensuring #FairDelimitation.
I warmly welcome all Chief Ministers and political leaders to this meeting, united in our… pic.twitter.com/s35eg8Tw7g
— M.K.Stalin (@mkstalin) March 22, 2025