சென்னை: இவிஎம் (EVM) எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து ஆய்வு செய்து பாராளுமன்றத்தில்  விவாதம் நடத்த வேண்டும் என திமுக எம்.பி. பி.வில்சன்  வலியுறுத்தி உள்ளார்.

இவிஎம் குறித்து நாடு முழுவதும் பல்வேறு சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது. தேர்தலில் தோற்கும்போது இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டு விட்டதாகவும், வெற்றி பெற்றால், இவிஎம் எந்திரத்தில் முறைகேடு நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில்,  மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி சார்பில் மும்பை வட மேற்கு தொகுதி வேட்பாளரான ரவீந்திர வாய்க்கர், வாக்குப்பதிவு இயந்திரத்தை போன் மூலம் OTP அனுப்பி ஹேக் செய்து வெற்றி பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் EVM-ஐ ஹேக் செய்ய முடியும் என்று கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். ஆனால், தேர்தல் ஆணையம் இதை மறுத்து வருகிறது. தற்போது இந்த விவகாரம் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில், திமுக எம்.பி. வில்சன்  தனது சமூக வலைதள பதிவில்,  “ஆம், எலான் மஸ்க் கூறியது உண்மைதான். இந்தியா போன்ற உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது. பல்வேறு நாடுகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை நம்பாத நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் மட்டும் அதனை தாங்கி பிடித்துள்ளது.

வாக்குச்சீட்டு முறையை ஒழித்த பிறகு, தொழிநுட்ப முன்னேற்றத்தின் அடிப்படையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. வேலை நேரத்தை குறைக்கும் வகையிலும், தேர்தல் முடிவுகளை விரைவாக அறிவிக்கும் வகையிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிமுகமானது.

ஆனால் இதனை ஹேக் செய்ய முடியும் என பல்வேறு ஆய்வுகளின் முடிவுகள் தெரிவித்துள்ளன. அனைத்து கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற குழு முன்னிலையில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறிவியல் ஆய்வு நடத்த ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பித்து, அதன் மீது விவாதம் நடத்தி, நாட்டு மக்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான அச்சத்தை களைய வேண்டும்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.