சென்னை: திராவிடர் கழகம் சார்பில் நாளை இந்தி அழிப்பு போராட்டம் கழக தலைவர் வீரமணி தலைமையில் நடைபெறுகிறது.

தேசியக் கல்விக் கொள்கையை மறைத்து இந்தியைத் திணிக்கும் மத்திய அரசின் முயற்சியைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நாளை (சனிக்கிழமை ) எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தேசியக் கல்வி என்ற பெயரால் மத்திய அரசு திணிக்க இருக்கும் இந்தியை எதிர்த்து நாளை (ஏப்.30) திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில், சென்னை பெரியார் திடலிலிருந்து புறப்பட்டு, பெரியார் ஈவெரா நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாகச் சென்று, சென்னை – எழும்பூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த கி.வீரமணி சமீபத்தில் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள  “புதிய கல்விக் கொள்கை என்பது அனைவருக்கும் கல்வி என்பதைவிட படிப்பு தடுப்பு கல்விச் சட்டம் எனலாம். என்இபி (NEP) என்பது நேஷனல் எஜுகேஷன் பாலிசி (National Education Policy) அல்ல, நோ எஜுகேஷன் பாலிசி(No Education Policy). ராஜாஜியின் பழைய குலக்கல்வித் திட்டத்தைத் தான் மீண்டும் தேசிய புதிய கல்வித்திட்டம் என அறிமுகம் செய்கின்றனர். தாய்மொழிக்கு முக்கியத்துவம் எனக் கூறி 3-வது மொழியாக சம்ஸ்கிருதம், இந்தியை பரப்ப வேண்டும் என்பதுதான் திட்டம் என்று கூறினார்.