சென்னை: தமிழ்நாட்டில்  கடந்த நான்கரை ஆண்டுகால திமுக ஆட்சியில்  3 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  வழங்கப்பட்டு உள்ளதாகவும்,  41 புதிய ITI நிலையங்கள்  தொடங்கப்பட்டு இருப்பதாகவும்  அமைச்சர் சி.வி.கணேசன் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டினை 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வுக் கூட்டம் சென்னை, தி.நகரில் தொழிலாளார் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் முன்னிலையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இக்கூட்டத்தில்  பேசிய அமைச்சர் சி.வி.கணேசன் , ”தொழிலாளர்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட நமது முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தலின்படி கொத்தடிமைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்ற சீரிய முயற்சியுடன், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொத்தடிமைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால், 24 மணி நேரத்திற்குள் அவர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்கு வருவாய் கோட்டாட்சியரால் விடுதலைச் சான்று வழங்கப்பட்டு, உடனடி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. அவ்வகையில், இவ்வரசு பொறுப்பேற்றது முதல், 944 தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக 2 கோடியே 56 இலட்சத்து 70 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், பல்வேறு துறைகளின் வாயிலாக மறுவாழ்வு நடவடிக்கைகளும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன என்றும், 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டினை கொத்தடிமைத் தொழிலாளர் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நோக்கத்தினை நிறைவேற்றும் வகையில் அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டுவரை 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்தது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், வேலைவாய்ப்பின்மை, வறுமை இவற்றை போக்கும் வகையில் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் முன்னோடியாக உள்ளது.

இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டு ஏராளமான மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது என்றும் தனியார் துறை வேலைவாய்ப்புகளின் மூலம் சுமார் 3 இலட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது”

இவ்வாறு கூறினார்.

[youtube-feed feed=1]