டெல்லி: காஷ்மீர் மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பதாக அகில இந்திய தேர்தல் ஆணையர்கள் குழு காஷ்மீர் மாநிலம் செல்கிறது. அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரை சந்தித்து  தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல மைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவு கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. தற்போது அங்கு சட்டப் பேரவை இல்லாததால், யூனியன் பிரதேசங் கள் துணைநிலை ஆளுநர் தலைமையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து அங்கு சட்டமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அதுகுறித்து மத்தியஅரசும் ஆலோசனை நடத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் செப். 30-க்குள் சட்டப் பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து,   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், எஸ்.எஸ். சாந்து ஆகியோர் வரும் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஶ்ரீநகர் சென்று, உள்ளூர் அதிகாரிகளை சந்தித்து தேர்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

இந்த   ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர் வரும் 10-ம் தேதி, ஜம்முவில் செய்தியாளர்களை தேர்தல் ஆணையர்கள் சந்திக்க உள்ளனர். அப்போது மாநிலத்தில் தேர்தல் நடத்துவதற்காக  சூழல் குறித்து  அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக காஷ்மீர் மாநிலத்தில்  பாதுகாப்பு சூழ்நிலை எப்படி உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகத்திடம், தலைமைத் தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை தந்த பின்னர் அதுதொடர்பாக ஆய்வு நடத்தி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்புகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு  வெளியிடும் என எதிர் பார்க்கப்படுகிறது.