டெல்லி

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

இன்று (செப்டம்பர் – 11ம் தேதி) பகல் 12.58 மணியளவில் பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8-ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது.  குறிப்பாக இந்தியாவின் தலைநகர் டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஜம்மு – காஷ்மீரில் உள்ள சில இடங்களில் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து, வீடுகள் மற்றும் அலுவகங்களில் இருந்து வெளியே வந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளிவந்துள்ளது. டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களில் டெல்லியில் நிலநடுக்கம் உணரப்படுவது இரண்டாவது முறையாகும்.