மெக்கா

டும் வெப்பம் காரணமாக மெக்கா சென்றுள்ள 19 ஹஜ் பயணிகள் மரணம் அடைந்துள்ளனர்.

உலகம் முழுவதும் உள்ள பல இஸ்லாமியர்கள் சவுதி அரேபியாவின் மெக்கா நகருக்கு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த ஆண்டில், 18 லட்சம் யாத்ரீகர்கள் சவுதிக்கு பயணம் மேற்கொள்வார்கள் என அந்நாட்டுக்கான புள்ளியியல் அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கின்றது.

இந்த ஆண்டு சவுதி அரேபியாவில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது.  குறிப்பாக மெக்காவில் 48 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி உள்ளது. எனவே புனித பயணம் மேற்கொள்பவர்கள், அதிக வெப்ப சூழலில் நீர்ச்சத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

சவுதி ராணுவம் வெப்ப தாக்கத்தினை எதிர்கொள்ள கூடிய வகையிலான மருத்துவ குழுவினர் உள்பட 1,600 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது.  மேலும் 30 அதிரடி விரைவு குழுவினரும், 5 ஆயிரம் சுகாதார மற்றும் முதலுதவி தன்னார்வலர்களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

வெப்ப அலையால், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த செய்தியை ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும், ஈரானின் செம்பிறை அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளன.

ஜோர்டான் அரசு ஜெட்டாவில் உள்ள சவுதி அதிகாரிகளிடம் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அவர்களின் உடல்களை ஜோர்டானுக்கு திரும்ப கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.