டெல்லி: மத்திய, மாநில  பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழாவில் இனி கருப்பு நிற ஆடை அணியக்கூடாது, அதற்கு பதில் மாநில பாரம்பரிய ஆடைகள் அணியலாம்என  மத்திய அரசு அறிவித்து உள்ளது.

இந்த நடவடிக்கை பிரதமர் நரேந்திர மோடியால் கோடிட்டுக் காட்டப்பட்ட “பஞ்ச் பிரான்” தீர்மானங்களுடன் ஒத்துப்போகிறது, இது காலனித்துவ மரபுகளை அகற்றி இந்திய பாரம்பரியங்களை தழுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

: “பட்டமளிப்பு விழாவில் கருப்பு வண்ண ஆடைகளுக்கு பதிலாக இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம்” என்று மத்திய அரசு மருத்துவமனைகள் மற்றும் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிலையங்களுக்கு சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. “பட்டமளிப்பு விழாவின்போது அணியப்படும் கருப்பு நிற ஆடை, ஆங்கிலேயர் ஆட்சியர்களால் தங்கள் காலனி ஆதிக்க நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது,” என்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதனால், இந்த காலனி ஆதிக்க நடைமுறை மாற்றப்பட வேண்டும் என்றும் பட்டமளிப்பு விழாவில் கருப்பு வண்ண ஆடைகளுக்கு பதிலாக இனி இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொள்ளலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்தியஅரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,  “அமைச்சகத்தின் பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படும் பட்டமளிப்பு விழாக்களில், தற்போது நடைமுறையில் கருப்பு அங்கி மற்றும் தொப்பி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆடை ஐரோப்பாவில் இடைக்காலத்தில் உருவானது. மேலும், ஆங்கிலேயர்களால் அவர்களின் அனைத்து காலனிகளிலும் இந்த பழக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பாரம்பரிய காலனித்துவ மரபு மாற்றப்பட வேண்டும்.

அதன்படி, மருத்துவக் கல்வியை வழங்குவதில் ஈடுபட்டுள்ள AIIMS/INI உட்ளிட்ட அமைச்சகத்தின் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பட்டமளிப்பு விழாவிற்கு பொருத்தமான இந்திய ஆடைக் குறியீட்டை, நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தின் உள்ளூர் மரபுகளின் அடிப்படையில் வடிவமைக்கலாம் என்று அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கான முன்மொழிவு, செயலாளரின் (சுகாதாரம்) பரிசீலனை மற்றும் ஒப்புதலுக்காக அமைச்சகத்தின் அந்தந்த பிரிவுகள் மூலம் அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.