சென்னை: நெருப்போடு விளையாட வேண்டாம்” மக்களாட்சி மக்களுக்கே உரியது என பீகாரில் போலி வாக்காளர் நீக்கம் குறித்த இந்திய தேர்தல் அணையத்தின் நடவடிக்கைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“வாக்காளர்களை தகுதி நீக்கி, தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயல் சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை!” என முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில், அங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த பல லட்சம் பேர் போலியாக வாக்குரிமை பெற்றுள்ளது. பங்காளாதேசிகள், ரோகிங்கியாக்கள் போல வெளிநாட்டைச் சேர்ந்த அகதிகள் வாக்குரிமை பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், பலர் பல இடங்களில் போலியான தகவல்களை கொடுத்து வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டைகள் பெற்றுள்ளதுடன், இறந்தவர்களின் பெயர்களிலும் போலியான அடையாள அட்டைகள் வைத்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலி வாக்காளர்களை நீக்க இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி, வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) என்கிற பெயரில், வாக்காளர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் பணியை மேற்கொண்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதை கண்டுகொள்ளாமல் தேர்தல் ஆணையம் நடவடக்கையை மேற்கொண்டது. அதன்படி, சுமார் 65 லட்சம் போலி வாக்காளர்களை நீக்கி உள்ளது. மேலும் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என அறிவித்துள்ளது.
ஆனால், எதிர்க்கட்சிகள், ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு எதிராக மக்கள் திரண்டு வருவதால், வாக்குகளை நீக்கி ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக காங்கிரஸ், திமுக, திரிணாமுல் உள்பட பல கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதனை பா.ஜ.க நேரடியாக செய்யாமல், வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) என்கிற பெயரில், தேர்தல் ஆணையத்தைக் கொண்டு செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது என குற்றம் சாட்டி வருகின்றனர். எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தி வருவதுடன், நாடாளுமன்றத்தையும் முடக்கி வருகின்றனர். இதற்கிடையில், எஸ்ஐஆர் (SIR) எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதிக்க மறுத்து விட்டது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், , “சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) என்பது சத்தமே இல்லாமல் பின்தங்கிய மற்றும் தங்களுக்கு எதிரான பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி, தேர்தலில் பா.ஜ.க.வுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாகும். இது சீர்திருத்தம் அல்ல; தேர்தல் முடிவுகளைத் திட்டமிட்டபடி வடிவமைக்கும் தில்லுமுல்லு நடவடிக்கை!
பீகார் மாநிலத்தில் நடந்ததே அனைத்தையும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டது. முன்பு தங்களுக்கு வாக்களித்த அதே மக்களே கூட இம்முறை நம்மை வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள் என்பதை டெல்லி அணி நன்கு உணர்ந்துள்ளது. அதனால்தான், அவர்கள் வாக்களிக்கவே கூடாது எனத் தடுக்கப் பார்க்கிறது. எங்களைத் தோற்கடிக்க முடியாது என்ற சூழல் எழுந்தால் எங்களை வாக்காளர் பட்டியலில் இருந்தே நீக்கப் பார்க்கிறீரகள். நெருப்புடன் விளையாடாதீர்கள். மக்களாட்சிக்கு எந்த வடிவில் அச்சுறுத்தல் நேர்ந்தாலும் அதனை உறுதியாக நின்று எதிர்ப்போம். முழு ஆற்றலுடன் தமிழ்நாடு தனது குரலை உரக்க எழுப்பும். இந்த அநீதிக்கு எதிராக ஜனநாயகரீதியான அத்தனை ஆயுதங்களையும் நாங்கள் அறவழியில் பயன்படுத்துவோம்.
அரசியலமைப்புச் சட்டத்தின்பால் நம்பிக்கை கொண்டுள்ள குடிமக்கள் அனைவருக்கும் சொல்லிக்கொள்வது என்னவென்றால்: S.I.R. என்பது ஒரு மாநிலத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல, நமது குடியரசின் அடித்தளம் தொடர்பானது. மக்களாட்சி மக்களுக்கே உரியது. அதனை எவரும் களவாட அனுமதிக்க மாட்டோம்!”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பீகாரில் 65 லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்! தேர்தல் ஆணையம் அதிரடி